சினிமா
டாக்டர் பட்டம் பெற்ற பாண்டியராஜன்
தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து, இயக்குநர் பாண்டியராஜன் சமர்ப்பித்த கட்டுரைக்கு டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன், 1949ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து சமர்ப்பித்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
தமிழகத்தில் புதுமைக் கலை மன்னன் என அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன், திரைப்பட இயக்குநர் ஆர். பாண்டியராஜன். கலைத் துறையின் மேல் உள்ள ஈடுபாட்டால் தன் இளம் வயதிலேயே, திரைத் துறையில் அன்று புகழ்பெற்று விளங்கிய தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவனிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது திரையுலக வாழ்வினைத் துவங்கினார்.
பின்னர் இயக்குநர் கே.பாக்யராஜிடம் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து, அவர் இயக்கிய மெளன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, விடியும் வரை காத்திரு, இன்று போய் நாளை வா போன்ற படங்களில் உதவி இயக்குநராய் பணிபுரிந்தார். அதன் பின் டார்லிங்…டார்லிங் படத்தில் இணை இயக்குநராய் உயர்ந்து, அவரின் முந்தானை முடிச்சு படத்தின் மூலக்கதை, திரைக்கதை உருவாக்கம் வரை இணை இயக்குநராய் பணியாற்றினார்.
பின்னர் 1985ஆம் ஆண்டு வெளிவந்த பிரபு, ரேவதி நடித்த கன்னிராசி திரைப்படம் மூலம் இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அடுத்து அதே ஆண்டு, டிசம்பர் மாதம் ஆண்பாவம் திரைப்படத்தில் நகைச்சுவை நாயகனாய் தன்னை வெளிப்படுத்தி அன்று முதல் இன்று வரை வெற்றிகரமான நடிகர் மற்றும் இயக்குநராய் வலம்வருகிறார் ஆர்.பாண்டியராஜன்.