ஃபிபா 2018
குரேஷியாவில் களை கட்டிய கொண்டாட்டம்… வீரர்களை எப்படி வரவேற்றனர் தெரியுமா!
ஜாக்ரெப் (ஜூலை 17) 2018: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் விளையாடிய மகிழ்ச்சியை குரேஷிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். நாடு திரும்பிய கால்பந்து வீரர்களுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பை மக்கள் அளித்து வருகின்றனர்.
21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்தன. அதில், முதல் முறையாக பைனலில் விளையாடியது குரேஷியா. பைனலில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
உலகக் கோப்பையில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பைனல் நுழைந்தது குரேஷியா. முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்த போதே, குரேஷியாவில் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன.
தலைநகர் ஜாக்ரெப்பின் மையப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, பைனல் போட்டியை பார்த்தனர். பைனலில் குரேஷியா தோற்றாலும், பைனல் வரை நுழைந்ததை குரேஷிய மக்கள் கொண்டாடுகின்றனர்.
ரஷ்யாவில் இருந்து நேற்று திரும்பிய குரேஷிய வீரர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
பஸ்ஸில் வீரர்கள் அழைத்து வரபபட, சாலையெங்கும் குழுமியிருந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உலகக் கோப்பையில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரருகான தங்கக் கால்பந்தை குரேஷிய கேப்டன் லுகா மோட்ரிக் வென்றார்.
லுகா மோட்ரிக் மற்றும் இவான் ராகிடெக் இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த நடுகள வீரர்களாக ஜொலித்தனர்.
தேசியக் கொடியில் உள்ள சிவப்பு வெள்ளை கட்டம் கொண்ட ஆடைகளை அணிந்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்ரெப்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள குரேஷியாவின் சுதந்திரத்துக்காக போராடிய நாட்டின் ஹீரோவான ஜேசிப் ஜெலிசிக்கின் சிலைக்கும், சிவப்பு மற்றும் வெள்ளை கட்டம் போட்ட மிகப் பெரிய கொடியை போர்த்தியிருந்தனர்.
இந்த கொண்டாட்டங்கள் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது