இந்தியா
இன்று மாலை மோடி சீனா பயணம்
புதுடில்லி : பிரதமர் மோடி இன்று மாலை சீனா செல்ல உள்ளார். அங்கு 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர், சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே 73 நாட்களாக நீடித்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி இன்று மாலை சீனா செல்கிறார்.
அங்கு வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்.இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம், எல்லைப் பிரச்சினை, போன்றவற்றுக்கு சுமுகத்தீர்வு காணும் வகையில் இப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷே முகமதுவிற்கு அமெரிக்கா தடைவிதித்த விவகாரம் குறித்தும் சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்றும் இரு தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நான்கு நாள் பயணமாக சீனா சென்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவது 30 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.